‘’பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினமும் நூறு ரூபாய்’’.. அசாம் அரசு அதிரடி அறிவிப்பு..

அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது.

இதனையொட்டி, மாணவ சமுதாயத்தின் ஓட்டுகளை அறுவடை செய்யும் நோக்கத்தில் அசாம் மாநில பா.ஜ.க.அரசாங்கம்,  அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘’அசாம் மாநிலத்தில் பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவிகளுக்கு தினமும் நூறு ரூபாய் வழங்கப்படும்’’ என அந்த மாநில கல்வி அமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

அங்குள்ள சிவசாகர் என்ற இடத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு, இலவச ஸ்கூட்டர்களை வழங்கிய பேசிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதுபோல், ’’ இளநிலை பட்டதாரி மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரத்து 500 ரூபாயும், முதுநிலை பட்டதாரி மாணவ- ,மாணவிகளுக்கு  ஆண்டுதோறும் இரண்டாயிரம் ரூபாயும் அளிக்கப்படும்’’ எனத் தெரிவித்த அமைச்சர், ஹேமந்த்’’ இந்தப்பணம்  மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்’’ எனக் கூறினார்.

‘’ஜனவரி மாத இறுதியில் இந்தப்பணம் வங்கியில் செலுத்தப்படும்’’ எனக் குறிப்பிட்ட அமைச்சர்’ இந்த பணத்தை வைத்து மாணவர்கள் பாட புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம்’ என்று மேலும் தெரிவித்தார்.’

– பா.பாரதி