கவுகாத்தி: அஸ்ஸாமிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அஸாமி மொழிப் பாடம் கட்டாயமாக்கப்படும் என்றும், 10ம் வகுப்பு வரை அஸ்ஸாமி படித்தால் மட்டுமே அரசு வேலைக்கான தகுதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் அம்மாநில நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா.

அவர் கூறியுள்ளதாவது, “மாநிலத்தில் கல்வி உள்கட்டமைப்பை சீரமைக்க ரூ. 3,000 கோடி செலவிடப்படும். சுமார் 15,000 தொடக்க கல்வி ஆசிரியர்கள் மற்றும் 8000 இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் நிரப்பப்படும்.

உயர்கல்வித் துறையில், சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் சுமார் 42,000 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அனைத்துப் பள்ளிகளிலும் அஸாமி மொழியைக் கட்டாயப் பாடமாக மாற்ற மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன்பொருட்டு, வரும் நாட்களில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்படும்.

மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் அஸாமி மொழிப்பாடம் கட்டாயமாக்கப்படும். 10ம் வகுப்பு வரையில் அஸாமி படித்தால் மட்டுமே அரசு வேலைக்கு தகுதிபெறுவார்கள்” என்றார்.