சென்னை:
க்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாக மற்றும் செயற்குழுவில் உள்ள உறுப்பினர்கள் பலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.

இதன்படி இன்று காலை 10 மணியில் இருந்து கமல்ஹாசன் நேர்காணல் நடத்தினார். இதற்காக நேற்று முதல் 3 நாட்களுக்கு நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னையில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இன்று முதல் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மண்டலத்துக்கு உட்பட்ட நிர்வாகிகளிடமும் இன்று பகலில் நேர்காணல் நடைபெறுகிறது.

அடுத்த 5 நாட்களும் தொடர்ச்சியாக நேர் காணலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் வருகிற 7-ஆம் தேதி அன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

வேட்பாளர் தேர்வின் போது விண்ணப்பித்தவர்கள் பற்றிய பின்னணி விவரங்களை முழுமையாக கமல்ஹாசன் ஆய்வு செய்தார். தொகுதியில் செல்வாக்குடன் திகழும் குற்ற பின்னணி இல்லாத நபர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய கமல்ஹாசன் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். அது இன்றைய நேர்காணலின்போது முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.