டெல்லி:

உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் உ.பி., உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் பஞ்சாப்பில் வெற்றி பெற்றுள்ளது. கோவா, மணிப்பூரில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்யும் வகையில் ‘நோட்டா’ பட்டன் வாக்குப் பதிவு எந்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் 5 மாநில தேர்தலில் கோவா மாநிலத்தில் அதிகப்படியாக நோட்டாவுக்கு வாக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

மொத்தம் 1.2% வாக்குகள் கோவா மாநிலத்தில் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரகாண்டில் 1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பாஜ அமோக வெற்றி பெற்ற உ.பி.யில் 0.9 சதவீதம் வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது, பஞ்சாப்பில் 0.7 சதவீதமும், மணிப்பூரில் 0.5 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது.

உ.பி.யில் 4 ஆயிரத்து 800 வேட்பாளர்களும், கோவாவில் 250 வேட்பாளர்களும், உத்தரகாண்டில் 600க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும் போட்டியிட்டனர். பஞ்சாப்பில் ஆயிரத்து 100 வேட்பாளர்களும், மணிப்பூரில் சுமார் 100 பேர் போட்டியிட்டனர்.

கோவாவில் 40 தொகுதிகளும், உத்தரகாண்டில் 70 தொகுதிகளும், மணிப்பூரில் 60 தொகுதிகளும், பஞ்சாப்பில் 117 தொகுதிகளும், உ.பி.யில் 403 தொகுதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.