மே.வங்க மாநிலம் புஷ்னுபூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் சவுமித்ரா கான்.

பா.ஜ.க.வில் உறுப்பினராக இருந்த சவுமித்ராவின் மனைவி சுஜாதா மண்டல் கான், நேற்று முன்தினம் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சவுமித்ரா, கட்சி மாறிய தனது, மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். சுஜாதாவுக்கு விவாகரத்து நோட்டீசையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் ஆங்கில இதழ் ஒன்றுக்கு சவுமித்ரா அளித்துள்ள பேட்டியில் ‘’ஜோதிடர் ஒருவர் பேச்சை கேட்டு என் மனைவி கட்சி மாறி உள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

‘’கட்சி மாறினால் பெரிய பதவி கிடைக்கும் என அந்த ஜோதிடர் ஆரூடம் கூறியதால் சுஜாதா திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்’’ என தெரிவித்த சவுமித்ரா ‘’சுஜாதா கட்சி மாறியதற்கு திரினாமூல் காங்கிரஸும் ஒரு காரணம்’’ என குற்றம் சாட்டினார்.

“எனது வீட்டு லட்சுமியை என்னிடம் இருந்து திரினாமூல் காங்கிரஸ் களவாடி விட்டது’’ என குமுறலுடன் தெரிவித்த சவுமித்ரா ’’அந்த கட்சி என் மனைவிக்கு முதல்-அமைச்சர் பதவியை கூட கொடுக்கலாம்’’ என்று கிண்டல் செய்தார்.

’’எனது குடும்ப பெயரான ’கான்’ என்ற பெயரை சுஜாதா தனது பெயரில் சேர்த்துக்கொள்ளக்கூடாது’’ என்றும் சவுமித்ரா கூறி இருந்தார்.

இதையடுத்து “இனிமேல் கான் என்ற பெயரை என் பெயருடன் சேர்த்துக்கொள்ள போவதில்லை’’ என சுஜாதா நேற்று அறிவித்தார்.

– பா. பாரதி