அகமதாபாத்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை வீரர் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக குறைவான போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாளான இன்று பேட்டிங் செய்த இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்து வருகின்றனர்.இதில், 23வது ஓவர் மூன்றாவது பந்தை வீசிய அஸ்வின், இங்கிலாந்து வீரர் ஆர்சரை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400வது விக்கெட்டை பதிவு செய்தார்.குறைந்த போட்டிகளில் 400 விக்கேட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முரளிதரனுக்கு அடுத்தபடியாக அஸ்வின் 77 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதே ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் போது சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.