’’கேரளாவில் சினிமா தியேட்டர்களை இப்போதைக்குத் திறக்கும் வாய்ப்புகள் இல்லை’’

 

ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, வரும் 15 ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் கேரள மாநில சினிமா தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் லிபர்டி பஷீர் அளித்துள்ள பேட்டியில்’’ கேரள மாநிலத்தில் தியேட்டர்கள் மீது ஜி.எஸ்.டி., உள்ளூர் வரி, நல வரி, வெள்ள நிவாரண வரி ஆகிய வரிகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வரிகளை மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் மட்டுமே திரையரங்கங்களைத் திறக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.

கேரளாவில் இப்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட பஷீர்,  தியேட்டரில் படம் பார்த்து விட்டுச் சென்ற யாராவது ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் , அந்த தியேட்டரையே மூட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் ‘’ என்றார்.

‘’இது போன்ற சூழல்களால் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்களை திறக்கப்போவதில்லை’’ என்று கூறிய லிபர்டி பஷீர்’’ திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம்’’ என்றார்.

தமிழ்ப் படங்களுக்கு, தமிழ்நாட்டுக்கு அடுத்த படியாக மார்க்கெட் உள்ள கேரளாவில் இப்போதைக்கு திரையரங்கங்களைத் திறப்பதில்லை என்ற முடிவு, தமிழக திரை உலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-பா.பாரதி.