போபால்:

மத்தியபிரதேசத்தில் உள்ள ஏ டி எம் களில் சீரியல் எண் இல்லாத ரூ.500 நோட்டுகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டமோ நகரில் ஆசிரயராக பணியாற்றிவரும் நாராயண் அகர்வால் என்பவர் நேற்று, அங்குள்ள ஏடிஎம் மையத்தில் ரூ, 1000 எடுத்தார். இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. அவற்றை எடுத்தப் பார்த்த அகர்வால் இரண்டு ரூ.500 நோட்டுகளிலும் சீரியல் எண் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதேபோல் இவருக்கு அடுத்த வரிசையில் நின்றிருந்த சஞ்சய்அசாதி என்பவருக்கும் இதேபோன்று சீரியல் எண் இல்லாத ரூ,500 நோட்டுகளே கிடைத்தன. இதையடுத்து அந்த ஏடிஎம் மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதனால் போலீசார் அந்த ஏடிஎம்-ஐ மூடி சீல் வைத்தனர். பாதிக்கப்பட்டவர்கள் வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டு சீரியல் எண் இல்லாத நோட்டுகளை மாற்றித்தரும்படி கேட்டதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.

டமோ நகரில் இருக்கும் பல்வேறு ஏடிஎம் களில் இதுபோன்று நிகழ்வுகள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நடந்து வருவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனிடையே இச்சம்பவம் பற்றி  செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திலக் சிங்,  இதுகுறித்து புகார் எதுவும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.