ஜெனீவா:

ஜெனீவா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தகராறு செய்ய சிங்களர்கள் முயற்சி செய்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் பிரச்சினையும் விவாதிக்கப்படுகிறது.

இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 2 முறை பேசினார். பேச்சை முடித்த சில நிமிடத்தில் கவுன்சில் வளாகத்தில் இலங்கையை சேர்ந்த 6 சிங்களர்கள் வைகோவை சூழ்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வைகோவிடம் தகராறு செய்த சிங்களர்களில், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த குழுவில் இருந்த சிங்கள பெண் ஒருவர், இலங்கை பிரஜை இல்லாத நீங்கள் இலங்கையை பற்றி எப்படி பேசலாம்? என்று வைகோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு, ‘‘நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி ரத்த உறவு இருக்கின்றது. ஆகவே எனக்கு பேச உரிமை உண்டு’’ என்று வைகோ பொறுமையாக பதில் அளித்தார். சிங்கள பெண், வைகோவுடன் தகராறு செய்வதை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு உள்ளேயே சிலர் வீடியோ எடுத்தனர்.

மனித உரிமைகள் கவுன்சில் உள்ளே வைத்து யாரும் வீடியோ எடுக்கக்கூடாது. திட்டமிட்டு வைகோவை மனித உரிமைகள் கவுன்சிலுக்குள் வர விடாமல் தடுக்க செய்கின்ற சதி என்று ஈழத்தமிழர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே வீடியோ குறித்து பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவை அழித்துவிட்டனர் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மனித உரிமை கவுன்சிலுக்கு உள்ளேயே ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங்களர்கள் ஈடுபட்டது கவலை அளிக்கிறது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.