டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடையே புகுந்து விவசாய சங்கத்தலைவர்களை தீர்த்துக்கட்ட முயற்சி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்பபட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளில் போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்த  சதி நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 50 நாட்களை கடந்து தொடர்ந்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக விவசாய அமைப்பினருடன்,  அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருந்தாலும் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில்,  ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று, அரசு சார்பில் ராஜபாதையில் ராணுவம் அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினமே, மத்தியஅரசுக்கு எதிராக  டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால், டிராக்டர் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்தில், கலவரத்தை உருவாக்கும் விதமாக, அடையாளம் தெரியாத ஒருவர், விவசாயிகள் நான்கு பேரை கொலை செய்ய ஏவப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

2 பெண்கள் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் விவசாயிகளிடையே புகுந்துள்ளதாகவும், அவர்கள் விவசாயிகளின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு வீசி கலவரம் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள விவசாயிகள், ஒருவரை பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

மேலும், அந்த நபருக்கு காவல்துறையினர் பணம் கொடுத்து ஏற்பாடு செய்ததாகவும், ஜனவரி 23 ந்தேதியில்இருந்து 26ந்தேதிக்குள்  கலவரம் செய்யவே தான் வந்ததாகவும்,  அந்நபர் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவரை காவலில் வைத்து போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இது விவசாயிகள் போராட்டத்தை முடக்க மேற்கொள்ளப்படும் சதி என விவசாயிகள் தலைவர் குல்வந்த் சிங் சந்து புகார் தெரிவித்துள்ளார்.