சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் நேற்று சென்னையில் போராட்டம் நடத்தின.

அப்போது கூட்டத்தைக் கலைக்க காவலர்கள் தடியடி நடத்தினர். போராட்டத்தில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் உட்பட பலர் காவல்துறையினரின் தடியடிக்கு ஆளாகினர்.

இதற்கிடையே காவலர் ஒருவரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கினர். இது வீடியோவாக சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட மூவரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியினர் பத்து பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதியப்பட்டுள்ளது.