சென்னை:
சென்னை ஆலந்தூர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய மூவர் முயற்சித்ததைப் பார்த்து உதவி செய்ய சென்றவரின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொல்ல முயற்சித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு கபாலி படத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தபோது அந்தப் பெண்ணுக்கும், தனக்கும் என்ன நேர்ந்தது என்பது குறித்து பாதிக்கப்பட்ட வசந்த் பால் என்பவர் போட்டோ உடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வசந்த்பால்
வசந்த்பால்

அவர் தனது பதிவில் தெரிவிப்பதாவது:
“எனது உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால்,இன்று கழுத்தில் ஏற்பட்ட காயம் எனக்கு பெருமையாக இருக்கிறது. இன்று எனக்கு ஒரு அற்புதமான நாளாக அமைந்தது.
வெள்ளிக்கிழமை இரவு கபாலி படம் பார்த்துவிட்டு, தி.நகரில் உள்ள நண்பர்களை சந்தித்து பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தேன்.
ஆலந்தூர் பாலம் அருகே செல்லும்போது புகை பிடிப்பதற்கு நின்றேன். அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. பார்த்தால், ஒரு பெண்ணை போதையில் இருந்த மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
வசந்த்பால் கழுத்தில் காயம்
வசந்த்பால் கழுத்தில் காயம்

இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு உதவுவதற்கு சென்றேன். அப்போது அவர்கள் மூன்று பேரும் என்னுடைய கழுத்தை சணல் கயிற்றால் நெறுக்கினர். நானும், அந்தப் பெண்ணும் அலறிய சத்தம் கேட்டு அந்த வழியே சென்ற ஆட்டோக்காரர் ஒருவர் ஓடி வந்தார். உடனே அவர்கள் மூன்று பேரும் அந்த இடத்தில் இருந்து ஓடிவிட்டனர்.
அந்த போதை நபர்கள்,  கழுத்தை நெரித்ததில் எனக்கு கடுமையான  காயம் ஏற்பட்டது. அந்தப் பெண் கேட்டுக் கொண்டதால் காவல்துறையில்  புகார் அளிக்கவில்லை.
இரவு ரோந்தில் காவலர்கள் இருப்பார்கள் அவர்களிடம் இதுகுறித்து கூறலாம் என்று அங்கு தேடினேன். ஆனால், எங்கேயும் போலீசார் இல்லை.
காவல்துறையில் முறையாக புகார் கொடுக்காவிட்டாலும், போலீசாரிடம் இந்தத் தகவலைக் கூறலாம் என்று பார்த்தால் யாரும் இல்லை. சென்னை பாதுகாப்பற்ற நகரமாக சென்று கொண்டு இருக்கிறது”  என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், “எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர் கொள்ளுங்கள்” என்றும் வசந்த் பால் தெரிவித்துள்ளார்.
வசந்த்பால் முகநூல் பதிவு
வசந்த்பால் முகநூல் பதிவு

 
கடந்த வாரம் ஓலா கேப்பில் தனியாக சென்ற பெண் ஒருவர், தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இப்போது வசந்த் பால் என்பவர் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பட்டினபாக்கம் அருகில் இருசக்கரவாகனத்தில் சென்ற பெண்ணின் நகையை கொள்ளையர் பறிக்க, அவர்களை துரத்திச் சென்ற அந்த பெண்ணை கொள்ளையர்கள் தள்ளிவிட்டதில் அவர் மரணமடைந்தார்.  இப்படி தொடர்ந்து  அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
சுவாதி கொலை சம்பவத்திற்குப் பின்னர் பல இடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்காக ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று  காவல்துறையினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/photo.php?fbid=10202065473474534&set=pcb.10202065474074549&type=3