மெல்போர்ன்:

95 ஆயிரம் தற்காலிக ஊழியர்களுக்கு விசா வழங்கும் திட்டத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்து செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் பயனடைந்து வந்தனர். இதில் இந்தியர்கள் அதிகம். நாட்டில் ஏற்பட்டுள்ள வேலை இல்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ள இத்தகைய முடிவை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது.

457 விசா என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் அங்குள்ள தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை 4 ஆண்டுகளுக்கு பணியமர்த்திக் கொள்ள முடியம். ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு உள்ள திறன் தொழிலாளர்கள் பணியிடங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு வந்தார்.

‘‘நாங்கள் குடியேற்ற நாடு. ஆனால், ஆஸ்திரேலியா பணிகளுக்கு ஆஸ்திரேலிய குடிமகன்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதனால் 457 விசா முறை ஒழிக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநா டுகளை சேர்ந்த தற்காலிக ஊழியர்கள் நாட்டிற்கு வருகிறார்கள்’’ என்று அந்நாட்டு பிரதமர் மல்காம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

இந்த விசா வைத்திருந்தவர்களில் பெரும்பாலும் இந்தியர்கள். இவர்களை தொடர்ந்து பிரிட்டன், சீனாவை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறுகையில்,‘‘ வேலைக்காக 457 விசா இனி வழங்கப்படமாட்டாது. அந்த பணி ஆஸ்திரேலியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். திறன் மிக்க குடிமகன்களை உருவாக்கும் திட்டங்கள் கொண்டு வரப்படும்’’ என்றார்.

தொடர்ந்து டர்ன்புல் கூறுகையில், ‘‘கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை 95 ஆயிரத்து 757 பணியளர்கள் 457 விசா முறை மூலம் அங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த திட்டம் மேலும் சில கட்டுப்பாடுகளுடன் மாற்று திட்டமாக அமல்படுத்தப்படவுள்ளது. 457 விசாவுக்கு பதிலாக புதிய தற்காலிக விசா திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் மூலம் தேச நலனை கருத்தில் கொண்டு சிறந்த, பிரகாசமான பணியாளர்களை தேர்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்படும்’’ என்றார்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் சிக்கலான பணியிடங்களை நிரப்ப மட்டுமே வெளிநாடுகளில் இருந்து பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆஸ்திரேலிய பணியாளரை நியமனம் செய்வதை விட வெளிநாட்டு பணியாளரை நியமிப்பது எளிது என்று தொழில் நிறுவனங்கள் முடிவு செய்தால் அது இனி நடக்காது.

இந்தியா வந்துவிட்டு சென்ற ஒரு சில நாட்களில் டர்ன்புல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, கல்வி, எரிசக்தி உள்ளிட்ட 6 ஒப்பந்தங்களில் இந்தியாவுடன் கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.