ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் 20 நிமிடங்களில் கொரோனா தொற்றைக் கண்டறியும் இரத்தப்  பரிசோதனையைக் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது சோதனை மூலம் தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது கடந்தக் காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரையும் கண்டறிய முடியும் என அறிவித்தனர்.

ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 20 நிமிடங்களில் தனித்துவக் கொரோனா வைரஸ் தொற்றுநோயை உறுதி செய்யக் கூடிய ஒரு சோதனையை வடிவமைத்துள்ளனர். இது இரத்த மாதிரிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

“குறுகியக்கால செய்முறையாக இருப்பதால், இதன் மூலம் விரைவாக நோயை உறுதிப்படுத்த முடியும், மேலும், நோயாளிகள், அவர்களின் தொடர்புகளை அடையாளம் காணல் ஆகியவை விரைவாக முடிக்க முடியும். அதே நேரத்தில் சமூகம் முழுவதும் வைரஸ் நோய்த்தொற்றின் அளவைத் தீர்மானிக்க அதிக மக்கள் தொகை காரணமாக நீண்ட காலம் தேவையாகும்” என்று ஆராய்ச்சியாளர்கள் ஏசிஎஸ் சென்சார்கள் இதழில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்தனர். ஆய்வுக் குழுவுக்கு பயோபிரியா மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை ஆகியவை தலைமை தாங்கின, இதில் ஏ.ஆர்.சி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் கன்வர்ஜென்ட் பயோனோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (சி.பி.என்.எஸ்) ஆராய்ச்சியாளர்கள் அடங்குவர்.

அவர்களின் சோதனை, இரத்த மாதிரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் 25 மைக்ரோலிட்டர் அளவு பிளாஸ்மாவைப் பயன்படுத்தி, கொரோனா வைரஸ் காரணமாக இரத்த சிவப்பு செல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து திரளுதல் அல்லது சிவப்பு ரத்த செல்கள் கும்பல் கும்பலாக ஒன்றிணைதலைக் காணும் முறையை அடிப்படையாகக் கொண்டது ஆகும். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண தற்போதைய ஸ்வாப் சோதனை பயன்படுத்தப்படும்போது, திரளல் மதிப்பீடு – அல்லது இரத்தத்தில் ஒரு பொருளின் இருப்பு மற்றும் அளவைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வானது – தொற்று குணமான பின்னரும், சமீபத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதையும் தீர்மானிக்க முடியும் என்று கூறினர்.

இதன் மூலம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நூற்றுக்கணக்கான மாதிரிகள் பரிசோதிக்கப்படலாம் என்றும், தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் உருவாகும் ஆன்டிபாடி அளவைப் பரிசோதிக்கவும் இந்தச் சோதனைகள் பயன்படுத்தப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்றும், மற்றும் இதை அதிக அளவில் உற்பத்தி செய்ய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது என்றும் மேலும் கூறினர்.

தனித்துவ கொரோனா வைரஸ் உலகெங்கிலும் 22.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது மற்றும் கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் தோன்றியதிலிருந்து கிட்டத்தட்ட 0.78 மில்லியன் பேரை பலிவாங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மட்டும் சுமார் 23,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் 438 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Thank you: Money Control