சிட்னி: 

ஸ்திரேலியாவின் ஒஸ்மிங்டன் என்ற இடத்தில்  பண்ணை வீட்டில் 7 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு முனையில் ஒஸ்மிங்டன் என்ற இடம் உள்ளது. இந்தப் பகுதி ஒயின் உற்பத்திக்கு  பிரபலமானதாகும்.

 

அங்கு கிராமப் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டின் உள்ளே 5 பேரும், வீட்டின் வெளியே 2 பேரும் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காவலர்கள்  அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர்களில் 4 பேர் குழந்தைகள்; 3 பேர் பெரியவர்கள்.

 

அவர்களின் உடல்களில் துப்பாக்கியால் சுட்ட காயங்கள் இருந்தன. ஆகவே அவர்கள் 7 பேரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

இதுபற்றி ஆஸ்திரேலிய நாட்டின் போலீஸ் கமிஷனர் கிறிஸ் டாவ்சன், “சம்பவ இடத்தில் துப்பாக்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே துப்பாக்கிச்சூடு நடந்திருக்க வேண்டும். இது ஒரு பயங்கரமான சம்பவம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில், 1996-ம் ஆண்டு டாஸ்மேனியாவில் நடந்த துப்பாக்கிச்சம்பவம், அந்த நாட்டையே அதிர வைத்தது. அந்த சம்பவத்தில் ஒரே கொலையாளி, 35 பேரை சுட்டுக் கொன்றார்.

அதைத் தொடர்ந்து  ஆஸ்திரேலியாவில் பொதுமக்களிடம் இருந்த 10 லட்சம் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கி வைத்திருப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

இந்த நிலையில், இப்போது 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.