லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியை, 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், சாம் பில்லிங்ஸ் 110 பந்துகளில் 118 ரன்களும், பேர்ஸ்டோ 84 ரன்களும் அடித்தாலும்கூட, மற்ற வீரர்களில் கேப்டன் இயான் மோர்கன் தவிர, வேறு யாரும் 20 ரன்களைக்கூட தொடவில்லை. எனவே, அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஸம்பா 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.