nr
புதுவை 100 அடி சாலையில் உள்ள கட்சி தலைமையகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் என்.ஆர். காங்கிரஸ் அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். மக்கள் நலத்திட்டங்கள், சமூக பாதுகாப்புத்திட்டங்கள், நேர்மையான ஊழலற்ற ஆட்சி, வெளிப்படையான நிர்வாகம் புரிந்துள்ளோம்.
இவை எங்களுக்கு மீண்டும் வெற்றியைத்தேடித்தரும். என்.ஆர். காங்கிரஸ் அரசு மீது புதுவை மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். புதுவை மக்களுக்கு எவருக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரியும். தேர்தலில் தனித்து போட்டியிட என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித தயக்கமும் இல்லை. மக்களின் ஆதரவோடு தேர்தலை சந்திப்போம். எங்கள் அரசின் செயல்பாடுகளே எங்கள் வெற்றியை உறுதி செய்யும்.
2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வர். பின்னர் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அடுத்த வாரம் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளோம். இவ்வாறு ரங்கசாமி கூறினார்.