mad
மதுரையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (3-ந்தேதி) மாலை பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவரை திரளான தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அழகர்கோவில் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று கருணாநிதி ஓய்வு எடுக்கிறார்.
மதுரை அண்ணாநகரில் இன்று மாலை 5 மணி அளவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கருணாநிதி பேசுகிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகிறார்கள்.
கூட்டத்தில் விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். கூட்டம் முடிந்த பின்பு மீண்டும் ஓட்டலுக்கு சென்று கருணாநிதி தங்குகிறார். நாளை காலை 11 மணி அளவில் விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மதுரை தவிர தென்மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அண்ணாநகர் பகுதியில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கருணாநிதி வருகையை யொட்டி மதுரையில் ஆங்காங்கே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.