path
விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ‘தேர்தல் மன்னன்’ என்றழைக்கப்படும் பத்மராஜன் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.
உள்ளாட்சித் தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை மனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளவர் சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பத்மராஜன். இவர் இதுவரை 173 தேர்தல்களில் மனுதாக்கல் செய்துள்ளார். கின்னஸ் சாதனை முயற்சிக்காக இவ்வாறு அனைத்து தேர்தல்களிலும் மனு தாக்கல் செய்வதாக அவர் கூறினார். இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடவுள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் பத்மராஜன் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராமலிங்கம் (60), மாற்று வேட்பாளராக சுப்பிரமணி ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.