சென்னை:
கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் தமிழகஅரசு, தற்போது விமானப் பயணிகளின் வசதிக்காக, விமான நிலையங்களில் இருந்து ஆட்டோ, டாக்ஸி இயக்கலாம் என்று அறிவித்து உள்ளது. இது குறித்து தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்துக்கும், ஆட்டோ, டாக்ஸிகளை இயக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், சென்னையில்,  ஆட்டோ, டாக்ஸி, பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது நேற்று முதல் விமான சேவைகள் தொடங்கியுள்ளதால், விமான பயணிகளின் வசதிக்காக சென்னையில் தடை செய்யப்பட்டிருந்த ஆட்டோ, டாக்சி இயக்கத்தில் சில மாறுதல்களைச் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மே 3-ம் தேதி அன்று 4-வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில் வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் வேண்டுகோளின்படி ஆட்டோ, டாக்ஸி, சைக்கிள் ரிக்‌ஷாக்களை இயக்க சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி விமான நிலையம், ரயில் நிலையங்களில் ஆட்டோ, டாக்ஸி, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மூலம் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது”.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.