பெங்களூரு

பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ்  உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது.

பெங்களூரு நகரில் 62 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.   சுமார் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் இழந்துள்ளார்.  மரணம் அடைந்தவர் உடலில் வைரஸின் பாதிப்பு குறித்து அறிய அவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அவரது குடும்பத்தினர் அனுமதி அளித்த பிறகே இந்த பரிசோதனை நடந்துள்ளது.   இது குறித்த தகவல்களை வெளியே அறிவிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த பரிசோதனையை செய்த டாக்டர் தினேஷ் ராவ் மனித உடலில் இந்த வைரஸ் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிந்துக் கொள்ளவே இந்த பரிசோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக நடந்த இந்த பரிசோதனை இறந்து 18 மணி நேரம் கழித்து நடந்துள்ளது.   இது போலச் சோதனை ஏற்கனவே அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நடந்துள்ளது.  அத்துடன் இறந்தவரின் நுரையீரல் பாதிப்பு சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டது போலவே இருந்துள்ளது.

மேலும் இந்த பிரேதப் பரிசோதனையின் போது உடலின் தொண்டை, மூக்கு, மற்றும் வாயில் உள்ள பகுதிகளை ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது.

இறந்த உடலில் 18 மணி நேரம் ஆகியும் கொரோனா வைரஸ் உயிருடன் உள்ள தகவல் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.