சென்னை :

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து ஏ.வி.ராஜா நீக்கப்பட்டுள்ளதாக ஜெ. தீபா அறிவித்து உள்ளார்.

தீபாவின் பள்ளித்தோழரும், கார் டிரைவருமான  ஏ.வி.ராஜா,  தீபாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்றால்போல, தீபாவின் கணவர் மாதவனை அனைவர் முன்னிலையிலேயே போயஸ் தோட்ட பகுதியில் அடிக்க பாய்ந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளரான ஜெ. தீபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பேரவையின் கொள்கைகள் மற்றும கோட்பாடுகளை மீறி ராஜா செயல்படுவதாக குற்றம்சாட்டி இருக்கிறார். தொடர்ந்து பேரவைக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் பேரவையின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து ஏ.வி.ராஜா நீக்கப்படுவதாகவும்,  பேரவையின் கட்டுப்பாட்டை மீறி யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தீபா  கூறி உள்ளார்.

தீபாவின் நண்பர் ராஜா காரணமாகவே, தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அதன் காரணமாக  தீபாவின் கணவர் மாதவன் வீட்டை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கி நிகழ்ச்சியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.