திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கப்போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். அடுத்த விநாடியே அதைப் பாராட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டார் நடிகர் சங்க செயலாளர் விஷால்.  அவசர அவசரமாக தனது வீட்டிலேயே ப்ரஸ் மீட் வைத்து, “கலைத்துறையை வாழ வைக்கும் அம்மா”  என்கிற ரேஞ்சுக்கு புகழ ஆரம்பித்துவிட்டார். அதோடு, நடிகர் சங்க சார்பாக ஒரு நன்றி கடிதமும் தயாரானது.

கார்த்தி, நாசர், விஷால்
கார்த்தி, நாசர், விஷால்

அதில், “தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி.  நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டுவிழா தங்களது பொற்கரங்களால் நிகழவிருக்கும் காலகட்டத்தில்  விருதும் வழங்குவது இரட்டை மகிழ்ச்சி” என்று பாராட்டி,  தலைவர் நாசர், பொ.செ. விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
பாராட்டு மடல்
பாராட்டு மடல்

ஆனால் திரையுலக மூத்த கலைஞர்கள், “கலைஞர்களுக்கு விருது கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் கடந்த பத்து வருடங்களாக விருது தரவில்லை. இப்படி பத்து வருடங்களாக எந்தவித குரலும் கொடுக்காத திரையுலக பிரமுகர்கள், இப்போது மட்டும் ஓடிப்போய் பாராட்டுகிறார்கள். சரி,  கடந்த பத்து வருடங்களாக விருது வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது என்பதை நாசூக்காகவாவது சொல்லியிருக்கலாமே. அல்லது    சாதாரணமாக நன்றி சொல்லிவிட்டு விட்டுவிடலாம். அதற்காக அமைச்சர்களைப்போல பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டுமா” என்கிறார்கள்.