டில்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, ஏற்கனவே நீதிபதிகள் தெரிவித்த யோசனைபடி, பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தர்கள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

உ.பி.மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியது. ஆனால் அதை ஏற்க மறுத்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  14 மேல்முறையீடு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூ‌ஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல்சாசன அமர்வு முன்பு கடந்த  மாதம் பிப்ரவரி 26 ம் தேதி விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மத்தியஸ்தம் மூலம் இந்த பிரச்சினையை ஏன் சுமுகமாக தீர்க்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும்,  ‘‘நீங்கள் அனைத்து தரப்பும் எதிர்ப்பு இல்லை என்று கூறினால், மத்தியஸ்தம் குறித்து நாங்கள் தீவிரமாக பரிசீலிக்கிறோம். அதில் ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தால்கூட, நாங்கள் உங்களுக்கு மத்தியஸ்தம் வாய்ப்பு தர தயாராக இருக்கிறோம். இதுபற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறோம். எந்த மூன்றாவது தரப்பும் இதில் கருத்து தெரிவித்து, அதனால் முழு நடவடிக்கையும் பாதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை’’ என்றனர்.

உச்சநீதி மன்றத்தின் யோசனைக்கு சில அமைப்புகள் ஒத்துக்கொண்ட நிலையில், சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஏற்கனவே பல முறை இதுபோன்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்றும் சமூக முடிவு எட்டப்பபடவில்லை என்று கூறப்பட்டது. அதையடுத்து, வழக்கின் விசாரணை மார்ச் 6ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வழக்கின் விசாரணையை தொடர்ந்து, அயோத்தி விவகாரத்தில், மத்தியஸ்தர்கள் நியமனம் செய்யப்படுவார்களா அல்லது உச்சநீதி மன்றமே வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குமா என்பது தெரிய வரும்.