‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் இயக்குநரான சச்சி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு சச்சி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஜூபிளி மிஷன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சச்சியின் உடல்நிலை குறித்து ஜூபிளி மருத்துவமனை:

“16 ஜூன் 2020 அன்று, சச்சிதானந்தனுக்கு, மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பின் மாரடைப்பு ஏற்பட்டது. பின்பு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வேறு மருத்துவமனையிலிருந்து ஜூபிளி மிஷன் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வென்டிலேட்டர் மற்றும் மற்ற மருத்துவ உதவிகள் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்களும் அவரது சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர். அவரது நரம்பியல் செயல்பாடு குறைவாக உள்ளது. மூளைக்குச் செல்லும் பிராண வாயு தடைப்பட்டுள்ளதால் மூளையில் பாதிப்பு இருப்பதும் சிடி ஸ்கேனில் தெரியவந்துள்ளது. 48-72 மணி நேர சிகிச்சைக்குப் பின்னரே அவர் நிலை குறித்துக் கணிக்க முடியும்”.