டெல்லி:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட பாஜ தலைவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கரசேவை என்ற பெயரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

பாஜ மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, அப்போதைய உ.பி. முதல்வர் கல்யாண்சிங் (தற்போது ராஜஸ்தான் கவர்னர்) உள்ளிட்ட 9 பாஜ தலைவர்கள் மற்றும் விஹெச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது சதி குற்றம்சாட்டப்பட்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த குற்றச்சாட்டில் இருந்து அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த முறையீட்டு வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது.

குற்றச்சாட்டில் இருந்து அத்வானி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதன் மீதான இறுதி தீர்ப்பு வரும் 22ம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் மூலம் அன்றைய தினம் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் 25 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த வழக்கில் இருந்து விடுக்கப்படுவார்களா அல்லது குற்றச்சாட்டு புதுப்பிக்கப்படுமா? என்பது தெரியவரும்.

மேலும், ரேபரேலி மற்றும் லக்னோவில் தனித்தனியாக நடந்து வரும் வழக்குளை இணைத்து லக்னோவில் விசாரிக்க சிபிஐ.க்கு நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர். மேலும், சர்ச்சைக்குறிய அந்த பகுதியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம என்று பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பை உள்ளடக்கிய சங் பரிவார் அமைப்புகள் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.