கூடலூர் (நீலகிரி )

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கூரையை உடைத்துக்கொண்டு குட்டி யானை வீட்டின் உள்ளே விழுந்தது. வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தை உட்பட இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன,

இங்குள்ள கோழிப்பாலம் பகுதியில் வசிக்கும் யாஹூ என்பவரின் வீட்டருகில் அதிகாலை 3 மணியளவில் ஒரு குட்டியுடன் இரண்டு யானைகள் வந்துள்ளன.

அங்கிருந்த பலாமரத்தின் பழத்தை பறிக்க குட்டியானை முயற்சித்தது. அப்போது தடுமாறி சாலையோர பள்ளத்தில் இருந்த வீட்டின் கூரை மீது குட்டியானை விழுந்துள்ளது. ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டால் கூரை அமைக்கப்பட்டிருந்தது.  அதனால் பாரம் தாங்காமல் ஆஸ்பெஸ்டாஸ் உடைந்து யானை வீட்டுக்குள் விழுந்தது.

இதில் வீட்டில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த 45 நாட்களே ஆன குழந்தை, குழந்தையின் தாயார் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. வீட்டில் விழுந்த குட்டியானை வெளியேற முடியாமல் த த்தளித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் வெளியே இருந்த யானைகள் வீட்டின் கதவை உடைத்து குட்டி யானையைக் அழைத்துச் சென்றன. யானைகள் வீட்டில் இருந்த யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.