அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், துவக்க விக்கெட்டுகள் விரைவிலேயே சரிந்தாலும், பேர்ஸ்டோ மற்றும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இணை தன்னம்பிக்கையுடன் ஆடிவருகிறது.

இங்கிலாந்தின் கிராலே 9 ரன்களிலும், டாம் சிப்லி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேசமயம், இந்தப் போட்டியில் பெரிதாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஜோ ரூட் 5 ரன்களில், முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால், இங்கிலாந்து அணி தடுமாற தொடங்கியது. ஆனால், அதன்பிறகு பேர்ஸ்டோவுடன் களம் கண்டார் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ்.

இவர்கள் இருவரும், இந்தியப் பந்துவீச்சை தைரியமாக எதிர்கொண்டு ஆடிவருகின்றனர். இதுவரை 52 பந்துகளை சந்தித்துள்ள பேர்ஸ்டோ, 6 பவுண்டரிகளுடன் 27 ரன்களை எடுத்துள்ளார்.

மொத்தம் 27 பந்துகளை சந்தித்துள்ள பென்ஸ்டோக்ஸ் 1 சிக்ஸர் & 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களை அடித்துள்ளார். இவர்கள் இருவரும் நிலைத்து நின்றுவிடாமல், விரைவிலேயே இந்திய பெளலர்கள் பிரித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்களை அடித்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின், தாமதமாகவே பந்துவீச கொண்டுவரப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.