புதுடெல்லி: இந்திய தலைநகரில் சிஏஏ தொடர்பாக நடத்தப்பட்ட பயங்கர வன்முறைகள் குறித்து தீவிரமாக ஒளிபரப்பிய 2 கேரள செய்தி சேனல்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆயிரக்கணக்கானோர் போராடிய நிலையில், இந்துத்துவா கும்பல் கடும் வன்முறையில் இறங்கியது. இதில் 53 பேர் பலியாகினர். வீடுகள், கடைகள் கொளுத்தப்பட்டன.

சேத மதிப்பு பல நூறு கோடிகள். இதனை ஒளிபரப்பிய கேரள டிவி சேனல்களான மீடியா ஒன் மற்றும் ஏசியா நெட் செய்தி சேனல்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது.

இந்தத் தடை மார்ச் 6ம் தேதி இரவு 7.30 மணி முதல் 8ம் தேதி இரவு 7.30 மணி வரை அமலில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த இரு டிவி சேனல்களும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை ஒளிபரப்பியதுடன், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக ஒளிபரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேண்டுமென்றே சிஏஏ ஆதரவாளர்கள் வன்முறை நடத்தியதாக குறிப்பிட்டு ஒளிபரப்பியதாகவும் அரசின் சார்பாக கூறப்பட்டுள்ளது.