துபாய்: இந்தியாவிலிருந்து அமீரகம் சென்ற விமானத்தில் ஒரு பயணி, கொரோனா தொற்றுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளதையடுத்து, வரும் அக்டோபர் 2ம் தேதிவரை, துபாய் வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் இந்த தடையைப் பிறப்பித்துள்ளது.

செப்டம்பர் 4ம் தேதி, துபாய்க்கு சென்ற விமானத்தில், ஒரு பயணிக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்த காரணத்தால், செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சின் அரசு விதிகளின்படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும் பயணத்திற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் செய்யப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையிலிருந்து அசல் கொரோனா நெகடிவ் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்.

செப்டம்பர் 2 தேதியிட்ட கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் பெற்ற ஒரு பயணி, செப்டம்பர் 4ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ஜெய்ப்பூர் – துபாய் விமானத்தில் பயணம் செய்தார். இதேபோன்ற ஒரு சம்பவம் சில நாட்களுக்கு முன்பும் நடந்துள்ளது. இதனையடுத்து, செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தடை செய்துள்ளதாக தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.