லாமு, ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலாமு பகுதியில் மோடியின் கூட்டத்தில் கருப்பு உடை, காலணிகள், குடை, பை ஆகியவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு நாடெங்கும் எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்து வருகின்றன. பல மாநிலங்களில் மோடி வரும் போது கறுப்புக் கொடி காட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதற்கு காவல்துறை தடை விதித்த போதிலும் திடீரென தாங்கள் அணிந்திருந்த கருப்பு உடைகளை எதிர்ப்பாளர்கள் காட்டி விடுகின்றனர்.

வரும் 5 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு பகுதியில் மோடி ஒரு நிகழ்வில் கலந்துக் கொள்கிறார். ஜார்க்கண்ட்மாநிலத்தில் தற்போது ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இந்நிகழ்வுக்கு வரும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதை ஒட்டி இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள வருவோருக்கு பலாமு மாவட்ட காவல்துறை சூப்பிரண்ட் அதிகாரி சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

காவல்துறை சூப்பிரண்ட் இந்திரஜித் மகாதா, “வரும் ஜனவரி 5 ஆம் தேதி பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வர உள்ளார். அவர் கலந்துக் கொள்ளும் நிகழ்வுகளில் கலந்துக் கொள்பவர்கள் கருப்பு நிற உடைகளான பேண்ட், சட்டை, கோட்டுகள், ஸ்வெட்டர்கள், மப்ளர்கள், சாக்ஸ், டை, காலணிகள் ஆகியவைகள் அணிந்து வரக்கூடாது. அத்துடன் கருப்பு நிறப்பைகள், குடைகள் ஆகியவைகள் எடுத்து வரக்கூடாது” என அறிவித்துள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே கருப்பு காலணிகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.