புதுடெல்லி: இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டி-20 போட்டியில், இந்தியாவை மிக எளிதாக வென்றது வங்கதேசம்.

இந்திய அணி நிர்ணயித்த 149 என்ற இலக்கை, 19.3 ஓவர்களில், வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது அந்த அணி.

டாஸ் வ‍ென்ற வங்கதேசம் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியில், தவான் மட்டுமே 42 பந்துகளை சந்தித்து 41 ரன்களை அடித்தார். மற்றபடி, பவுலர்கள் மட்டுமே சுமாரான பங்களிப்பை அளித்தனர்.

இறுதியில் 20 ஓவர்களில் இந்தியாவால் எடுக்க முடிந்தது வெறும் 148 ரன்களே. வங்கதேசம் சார்பில் ஷாபுல் இஸ்லாம் மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய வங்கசேத அணிக்கு, ரகிம் ஆட்டமிழக்காமல் 60 ரன்களையும்(43 பந்துகள்), சவும்யா சர்கார் 39 ரன்களையும், நெய்ம் 26 ரன்களையும் சேர்த்தனர். இறுதியில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அந்த அணி, 19.3 ஒவர்களில் 154 ரன்களை எட்டியது.

இந்திய தரப்பில் தீபக் சஹர், கலீல் அகமது மற்றும் யஸ்வேந்திர சஹல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மற்றபடி இந்தியப் பந்துவீச்சு பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.