டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃபே மொர்தஸா மற்றும் வேறு இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஷ்ரஃபே மொர்தஸா இந்தாண்டு துவக்கத்தில்தான் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு தற்போதைய வயது 36. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர்தவிர, நஸ்முல் இஸ்லாம் மற்றும் நஃபீஸ் இக்பால் என்ற வேறு இரண்டு வங்கதேச கிரிக்கெட் வீரர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“எனது சோதனை முடிவு பாசிடிவ் என்பதாக வந்துள்ளது. ஒவ்வொருவரும் நான் விரைவில் குணமாவதற்கு பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றுள்ளார் மொர்தஸா.

இவர் இதுவரை, 36 டெஸ்ட் போட்டிகள், 220 ஒருநாள் போட்டிகள் மற்றும் 54 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடிக்கு அடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின் இரண்டாவது பிரபல கிரிக்கெட் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.