சென்னை
வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய 35 கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு 15% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017 நவம்பர் முதல் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதற்காக வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களும் நடத்தி உள்ளனர்.
தற்போது 35 கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஊதிய உயர்வு குறித்து ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையில் 15% ஊதிய உயர்வு அளிக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது
ஒப்பந்தப்படி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த ஊதிய உயர்வைக் கடந்த 2017 நவம்பர் 1 முதல் பெறுவார்கள். இந்த ஒப்பந்தம் இன்னும் 90 நாட்களுக்குள் செயல் படுத்தப்படும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு காரணமாக வங்கிகளுக்கு ரூ.7898 கோடி செலவு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.