புதுடெல்லி: 2018-2019ம் நிதியாண்டில் வங்கி முறைகேடுகள் அதிகரித்து ரூ.71,543 கோடிகளாக உயர்ந்துள்ளது. இது 74% உயர்வு என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த 2018-19ம் நிதியாண்டில் மட்டும் 6801 வங்கி நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

இதில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 55.4%, தனியார் வங்கிகளில் 30.7% மற்றும் வெளிநாட்டு வங்கிகள் என்று பார்த்தால் அவற்றில் 11.2% என்பதாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

இதன்மூலம் கடந்த 2017-18ம் நிதியாண்டில் நடைபெற்ற வங்கி நிதி மோசடிகளின் அளவு ரூ.41,167 கோடி என்றால், அது தற்போது 74% அதிகரித்து ரூ.71,543 கோடி என்பதாக அதிகரித்துள்ளது.

மேலும், வங்கிகளின் வாராக்கடன் என்று பார்க்கையில், அது இந்த நிதியாண்டில் குறைந்துள்ளது என்பது ஆறுதலான விஷயம். கடந்த 2017-18 நிதியாண்டில் 11.2% என்பதாக இருந்த வாராக்கடன் விகிதம் தற்போது 9.1% என்பதாக குறைந்துள்ளது.

வாராக்கடன் விகிதத்தைப் பொறுத்தவரை, அது கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது.