டில்லி

ங்கியில் இதுவரை யாரும் உரிமை கோராமல் ரூ.11302 கோடி ரூபாய் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கியில் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு ஆனால் பத்து வருடங்கள் ஆகியும் கவனிக்கப்படாமல் அல்லது திரும்ப எடுக்கப்படாமல் உள்ள தொகைகளைப் பற்றி ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ரிசர்வ் வங்கி கணக்கு எடுத்து வருகிறது.   அவ்வாறு உள்ள தொகைகளை வருடம் முடிந்து 30 நாட்களில் வெளியிடுகிறது.

அதன் படி சென்ற ஆண்டுவரை மொத்தம் 64 வங்கிகளில் ரூ.11302 கோடி யாரும் கோரப்படாமல் பத்து ஆண்டுகளாக உள்ளது.   இதில் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1262 கோடி உள்ளது.  அடுத்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 1250 கோடி உள்ளது.   தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தமாக ரூ.7040 கோடி இவ்வாறு உள்ளது.  வங்கியில் மொத்தமுள்ள ரூ. 100 லட்சம் கோடியில் இது மிகச் சிறிய அளவு என்பது குறிப்பிடத் தக்கது.

இது குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி அதிகாரி சரண் சிங், “இது போன்றவைகள் பொதுவாக மரணம் அடைந்தவர்கள் அல்லது ஒரே நேரத்தில் பல கணக்கு வைத்துள்ளவர்களின் பணமாக இருக்கக் கூடும்.   அது மட்டுமின்றி சில நேரங்களில் இது பினாமிகளின் பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகளில் உள்ள பணமாகவும் இருக்கலாம்.  அல்லது கணக்கில் வராத பணமாக இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் வங்கி விதிகள் பிரிவு 26 ஏ ”பத்து வருடங்களாக கணக்கு கையாளப்படாமல் இருந்தாலும் அந்த கணக்கில் உள்ள தொகையை திரும்பப் பெற கணக்கு வைத்திருப்போருக்கு உரிமை உண்டு.   வங்கிகள் அந்த பணத்தை திருப்பி தந்தாக வேண்டும்”  என தெரிவிக்கிறது.