டெல்லி: கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன. அதன்படி, வங்கிகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்று மாற்றப்பட்டுள்ளது. நாள்தோறும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  காசோலைகள் வங்கின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

வங்கிக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியின் வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல கனரா வங்கியின் பணி நேரத்திலும் எந்த மாற்றமும் இல்லை. ஐசிஐசிஐ வங்கியின் வேலை நேரமானது காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று எச்டிஎப்சி வங்கியின் வேலை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் இருக்கும்.

ஆக்ஸிஸ், பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடக் மகிந்திரா வங்கியின்வேலை நேரம், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.