சென்னை:

முறையான சட்டப்படிப்பு படிக்காமல் வக்கீல் தொழில் செய்து வந்த 742 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் செய்திகுறிப்பில், ‘‘ 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்காமல் வெளி மாநில திறந்தவெளி பல்கலைகழகங்களில் பட்டம் பெற்று சட்டம் பயில்வதாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 742 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.தொடர்ந்து அவர்கள் வக்கீல் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. முன்னதாக அகில இந்திய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வில்லை என 1,025 வக்கீல்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், லெட்டர் பேடு பல்கலைக்கழகங்களில் சட்டப் பட்டத்தை விலைக்கு வாங்கி வந்து வக்கீல் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை நீக்கிவிட்டு பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்து பார் கவுன்சில் இந்த நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.