மும்பை: வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. அதற்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற டெஸ்ட், டி 20 போட்டிகளில் இந்தியா கலக்கியது. தென் ஆப்ரிக்கா அணியை இந்தியா, ஒயிட் வாஷ் செய்தது.

அதைத்தொடர்ந்து இந்திய அணி வரும் 3ம் தேதி வங்கதேசத்துடன் விளையாடுகிறது. டி20 , டெஸ்ட்  ஆகிய போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. நவம்பர் 3 ,7 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களில் டி 20 போட்டிகள் நடக்கின்றன.

அதன் பின்னர், நவம்பர் 14ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், 22ம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது. இந்த இரு தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

கேப்டன் விராட் கோலிக்கு டி20 தொடரில்  ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டனாக ஹிட் மேன் ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் விவரம் வருமாறு: ரோகித் சர்மா, ஷிகர் தவான்,கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட், வாஷிங்டன் சுந்தர், குருனால் பாண்டியா, யுஸ்வேந்திர சஹால், ராகுல் சாகர், தீபக் சாகர், கலீல் அகமது, சிவம் துபே, சர்துல் தாகூர்.