மும்பை: தேசிய போதை மருந்து தடுப்பு அமைப்பான நாடாவின்(NADA) விதிமுறைகளின் கீழ் செயல்பட, பல்லாண்டுகள் நிராகரிப்புக்கு பின்னர் இசைந்துள்ளது பிசிசிஐ அமைப்பு.

பிசிசிஐ அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் பொது மேலாளர்(கிரிக்கெட் செயல்பாடுகள்) சபா கரீம் ஆகியோர், விளையாட்டுத் துறை செயலாளர் ராதேஷியாம் ஜுலானியா மற்றும் NADA அமைப்பின் இயக்குநர் நவின் அகர்வால் ஆகியோரை சந்தித்தப் பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தடைசெய்யப்பட்ட மருந்தை உட்கொண்ட விவகாரத்தில் சிக்கியதையடுத்து, ஆட்சேபணை தெரிவித்த கடிதம் ஒன்றை பிசிசிஐ அமைப்பிற்கு எழுதியது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம். இதனையடுத்தே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

நமது நாட்டில் என்ன சட்டம் நடைமுறையில் உள்ளதோ, அதையே பிசிசிஐ அமைப்பும் பின்பற்றியாக வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அந்த அமைப்பின் முதன்மை செய்தி அதிகாரி ராகுல் ஜோரி.

தான் ஒரு தன்னாட்சி மிக்க அமைப்பு என்பதால், NADA அமைப்பின் விதிமுறைகளை பின்பற்ற தேவையில்லை என்று இத்தனை நாட்களாக பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தான் தேசிய விளையாட்டு கழகம் இல்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.