டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் காலரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டியது சட்டப்படி கட்டாயம். ஆனால், நடப்பாண்டில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு நிகழ்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிசிசிஐ கூட்டமும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான கால அவகாசத்தை 3 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசின் பதிவுத்துறை அனுமதி அளித்து இருக்கிறது.
அதாவது இந்த (செப்டம்பர்) மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்துக்குள் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை ஆன்-லைன் மூலம் நடத்தக்கூடாது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது.
இதனால் பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் தேதி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.