மும்பை:

பிசிசிஐ கிரிக்கெட் அமைப்பின் துணைத் தலைவராக கடந்த ஆண்டு பதவி ஏற்ற மஹிம் வர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

உத்தரகான்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் பதவிக்குத் தேர்வாகி உள்ளதால், பிசிசிஐ துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பிசிசிஐ தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டபோது துணைத் தலைவராக  மஹிம் வர்மா பொறுப்பேற்றார்.

இந்த நிலையில்   உத்தரகான்ட் கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மஹிம்வர்மா அதில் வெற்றி பெற்றுள்ளார். இதனால், பிசிசிஐ துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிசிசிஐ விதிமுறைகளின்படி ஒரு நபர் இரு பதவிகளில் பணிபுரியக் கூடாது என்பதால், அவர் பிசிசிஐ துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய மஹிம் வர்மா, . ஒழுங்கீனமான நிர்வாகத்தால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் என்னுடைய மாநில கிரிக்கெட் சங்கத்தைச் சரிப்படுத்தவேண்டும். எனவே எனது பிசிசிஐ துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். கடிதத்தைத் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரியிடம் வழங்கியுள்ளேன். என்னுடைய ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.