சென்னை:

சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கமாக செல்லும் பறக்கும் ரயில்களின் சேவை நாளை 6 மணி நேரம்  நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து புறநகர்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள், தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது ரத்து செய்யப்பட்டும், சேவை மாற்றம் செய்யப்பட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக  சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயில் சேவை நாளை 6 மணி நேரம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே ஞாயிறு ( செப்டம்பர் 15 ) காலை 7 50 மணி முதல் மதியம் 1 50 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட நேரங்களில் மின்சார ரயில்களின் சேவை இருமார்கத்திலும் நிறுத்தப்படுகிறது. மொத்தம் 36 சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

பின்னர் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு மதியம் 2 மணிக்கும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2 10 மணிக்கும் முதல் ரயில் சேவை தொடங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.