பெங்களூரு

குடியுரிமை சட்டத்தைக் காரணம் காட்டி பாஜக எம் எல் ஏ ஒருவர் தொழிலாளிகளின் குடிசைகளை இடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் இந்துக்கள், சமணர்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், பார்சிகள் போன்ற இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது

இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.    பல இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.   மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த போராட்டத்தில் வன்முறைகள் வெடித்துள்ளன.

சமீபத்தில் பெங்களூருவில் ஒரு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் உத்தரவின் பேரில் தொழிலாளர்கள் வசித்து வந்த 300 குடிசைகளை இடித்துத் தள்ளப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இவர்கள் வங்கதேசத்தவர் எனக் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த டிவிட்டர் பதிவில் வெளியான வீடியோவில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளில் ஒருவர், “இவ்வாறு பாதிக்கப்பட்டவர் அனைவரும் நம் நாட்டு மக்கள் ஆவார்கள்.  யாரோ ஒரு அரசியல்வாதி உத்தரவின் அடிப்படையில் எங்கள் குடிசைகளை இடித்துள்ளனர்.

நாங்கள் யாரையும் எதிர்த்ததில்லை.  யாருடனும் சண்டை போடவில்லை.  எங்கள் வேலையைக் கவனித்து வருகிறோம்.   நாங்கள் கர்நாடக மாநில கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள்.   அதற்கான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.