டில்லி,
அரசுக்கு வரி செலுத்துவோரிடம் கனிவோடு நடந்துகொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைநகர் டில்லியில், மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய அதிகாரிகளுடனான இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நேற்றைய இறுதி நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அவர் கூறியதாவது, ஜிஎஸ்டி அமல்படுத்திய கடந்த 2 மாதங்களில், 17 லட்சம் வர்த்தகர்கள் வரி செலுத்த முன்வந்துள்ளனர். ஜி.எஸ்.டி.யின் பயன்கள் தற்போதுதான் சாமானியர்களிடம் சென்றடைகிறது. இது அனைவரிடமும் சென்றடைய சிறப்பாக உழைக்குமாறும் வரித்துறை அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
மேலும், 2022-ம் ஆண்டுக்குள், நாட்டின் வரி நிர்வாகத்தை மேம்படுத்த இலக்கு நிர்ணயித்து அதற்காக பாடுபடுமாறும், நேர்மையாக வரி செலுத்துபவர்களிடம் கனிவோடு நடந்து கொள்ளும்படியும் வருமான வரித்துறை அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.