பீஜிங்,

லகின் மிகப்பெரிய விமான நிலையயம் தலைநகர் பீஜிங்கில் சீனா கட்டி வருகிறது. இந்த விமான நிலையம் வரும் 2019ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என சீன அரசு அறிவித்து உள்ளது.

விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், உள்நாட்டு விமான போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும் சீனா உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை தலைநகரில் கட்டி வருகிறது.

இந்த விமான நிலையத்தில்  ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகள் போக்குவரத்துக்கு உபயோகப்படுத்தும் வகையில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருவதாக சீனா அரசு கூறியுள்ளது.

தற்போது கட்டிவரும் இந்த விமான நிலையத்தில், விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணி களின் தேவைகள் மற்றும் வசதிகளை கணக்கில்கொண்டு கட்டப்பட்டு வருவதாகவும், பயணிகளின் வசதிக்கு விமான நிலையத்தினுள்  5 நகரும் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் விமான சேவைக்கு  7 விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதில், 4 ரன்வேக்கள் மட்டும் தொடக்கத்தில்  பயன்படுத்தப்படும் என்றும், பின்னர் தேவைப்படின் அனைத்து ரன்வேக்களும் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகள் விமான பயணத்துக்கு ஏற்றவாறு, விமான நிலையத்தினுள்ளே  புல்லட் ரெயில் சேவையும் அளிக்கும் வகையில் ஸ்டேஷனும் அமைக்கப்படுகிறது.

இந்த விமான நிலையம் உலக நாடுகளை ஈர்க்கும் வகையில்,  மிகவும் அழகாக கண்ணை கவரும் வகையில், அழகிய டிசைன்களுடன், வளைவான 6 கூர் முனைகளை கொண்டும், பயணிகள்  விமான தளத்தை  எளிதாக அடையும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக விமான போக்குவரத்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பீஜிங்கில் இரண்டு விமான நிலையங்கள் இருந்தாலும், இந்தி புதிய விமான நிலையம் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விமான நிலையம் திறக்கப்பட்டால், உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக மாறும் என கூறப்படுகிறது.