ஆடி வெள்ளிக்கிழமை விரத பலன்கள்
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளுக்குத் தனிச் சிறப்பு உண்டு. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்வார்கள். தங்கள் குல வழக்கப்படி, கணவன் மற்றும் குடும்ப நன்மை வேண்டி பெண்கள் அம்மனிடம் வேண்டிக் கொண்டு வழிபாடு செய்வார்கள். நடப்பு  ஆண்டில்  ஜூலை 17, 24, 31 ஆகஸ்டு 7, 14ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை வருகிறது.
ஆடி வெள்ளிக் கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரைப் பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்குத் தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாகப் பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களைத் தரும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும் என்பது ஐதீகம்.   இதை சுக்கிர வார விரதம் என்று அழைப்பார்கள். ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந்தாலும், பாவக்கிரகம் பார்வையினால், சுக்கிரன் பலமிழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும்.
இது முருகனையும், அம்பாளையும் நோக்கி இருக்கும் விரதம் ஆகும். சூரிய உதயத்திற்கு முன் குளித்து வெளிர் நீல ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஆடி.வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப் பெண்களுக்கு  உடனடியாக திருமணம் நடைபெறும்.

ஆடி வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குச் சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை எனப் பெண்கள் வீடுகளிலும் கோயில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். அன்று பெண்கள் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
இம்மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது. மகாலட்சுமிக்கு உகந்த இந்த விரதத்தை வீடுகளில் பூஜைகள் செய்து பெண்கள் அனுசரிப்பார்கள். சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்வார்கள்.
ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதை வழிபாடும் சிறப்பானது. புற்றுக்குப் பால் தெளித்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ, ஆகியவற்றைப் படைத்து பெண்கள் சிறப்புப் பூஜை செய்து வழிபடுவது வாடிக்கை. கூழ் வார்த்தல், வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருதல், பால்குடம் எடுத்து ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தல், தீக்குண்டம் இறங்குதல் என மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறும்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருமணமாகாத பெண்கள் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்.