சனிக்கிழமை விரத பலன்கள்

கடவுளுக்கு நாம் விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக என்பது அனைவரும் அறிந்ததே.  மனிதனுக்கு செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் மிகவும் முக்கியமானதும், அவசியமானதும். இம்மூன்றும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.

சனிபகவானை ஆயுள் காரகன் என்று அழைக்கிறோம். ஏனெனில் அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும். ஆயினும், அந்தக் கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். மேலும் சனிக்கு அதிபதியும் அவரே.

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த தினமாகக் கருதப்படுகிறது என்பதால் சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.

பகவான் மகாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. ஆகவே பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.

விரதங்களில் சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகல் வேளையில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு மாலையில் சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

எல்லா மாதங்களிலும் சனிக்கிழமை விரதத்தைக் கடைப்பிடிக்கலாம் என்றாலும் புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம் ஆகும்.  ஒருவர் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

வாழ்வில் சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

பெருமாளைச் சனிக்கிழமை அன்று ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார்.