டில்லி:

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத முகாம்களை இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்து இந்திய விமானப்படை வேட்டையாடியது.

இந்த அதிரடி தாக்குதலில், ஜெய்ஷ்இமுகமது அமைப்பின் முக்கிய கமாண்டர் யூசுப்  அசார் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஜெய்ஷ்இமுகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் மைத்துனர் என்று கூறப்படுகிறது.

புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இன்று அதிகாலை  இந்திய விமானப்படை வீரர்கள்  எல்லை தாண்டி பாகிஸ் தானின் பாலாகோட் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த அதிரடி தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் வேரறுக்கப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்த முக்கிய கமாண்டரான யூசுப் அசார் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பயங்கரவாதி  யூசுப் அசார், 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஐசி 184 விமானம் நேபாளத்துலிருந்து காந்தகாருக்கு கடத்தியவர்களில் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.