பாட்னா: பீகார் மாநில சட்டசபைத்தேர்தலுக்கான 3வது கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குதொடங்கியது. அதிகாலையிலேயே பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிகளில் குவிந்து வருகின்றனர்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏற்கனவே கடந்த 28ம் தேதி முதல் கட்ட தேர்தல்  71 தொகுதிகளில் நடைபெற்றது.  இங்கு  54.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து 2வது கட்ட வாக்குப்பதிவு கடந்த 3ம் தேதியன்று  94 தொகுதிகளில் நடைபெற்றது. இந்த  தேர்தலில் 53.51 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.

இன்று  78 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  தேர்தல் நடைபெற 78 தொகுதிகளில் மொத்தம் 2.35 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில்  1.23 கோடி ஆண்களும், 1.12 கோடி பெண்களும், 894 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். அவர்கள்  தங்களது வாக்குகளை நாளை பதிவு செய்ய தயாராகி வருகின்றனர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் உள்ள , 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 78 தொகுதிகளில், 12 அமைச்சர்கள் உட்பட, 1,204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.   கைகட்டா தொகுதியில் அதிகபட்சமாக 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேசமயம் டாக்கா, திரிவேனிகஞ்ச், ஜோகிஹாட் மற்றும் பகதூர்கஞ்ச் ஆகிய தொகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மக்கள் ஓட்டுச்சாவடிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஓட்டளிக்க காத்திருக்கின்றனர்.ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் நிலையில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ஓட்டுப்பதிவு 4 மணியுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன், பீகாரின் வால்மீகி நகர் லோக்சபா தொகுதிக்கும், இன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன், ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது. ஓட்டளிக்க வரும் வாக்காளர்கள், கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் கையுறைகளும் வழங்கப்பட உள்ளன.

ஓட்டுப்பதிவு நடக்கும் தொகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து தொகுதிகளிலும், ஓட்டு எண்ணிக்கை, நவ, 10ல் நடக்கிறது. அன்று மாலையே அனைத்து முடிவுகளும் வெளியாகி, பீஹாரில் யார் ஆட்சி அமைப்பர் என்பது தெரிந்து விடும்.